கியூபெக் மாகாண அரசு அண்மையில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், வீடற்றோர் நலனுக்காக போதிய நிதி ஒதுக்கப்படாததால், மொன்றியலில் உள்ள சமூக சேவை அமைப்புகள் தங்களது சேவைகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
புதிய பட்ஜெட்டில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு 90 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், அதில் 24.8 மில்லியன் டொலர் மட்டுமே “புதிய நிதி” என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இந்த நிதியும் கூட, மத்திய அரசிடமிருந்து நிறுத்தப்படவுள்ள நிதிக்கு மாற்றாகவே வழங்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தைக் கணக்கில் கொள்ளாமல், கடந்த காலங்களில் வழங்கப்பட்ட அதே அளவிலான நிதியையே தற்போதும் கியூபெக் மாகாண அரசு வழங்கியுள்ளது.
இது தங்களுக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என சேவை அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.
நிதிக் குறைபாட்டினால் வீடற்ற மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், கியூபெக் மாகாணத்தில் பணியாற்றும் சமூகப் பணியாளர்களுக்கு (Social Workers) ஊதியம் வழங்க முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
