என்.டி.பி (NDP) கட்சியின் கியூபெக் மாநிலத்திற்கான ஒரே பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் இருந்த அலெக்சாண்டர் பூலரிஸ் (Alexandre Boulerice), தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு மாநில அரசியலில் பங்கேற்கவுள்ளார்.
நேற்று காலை மொன்றியலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தாம் என்.டி.பி கட்சியிலிருந்து விலகி கியூபெக் சொலிடயர் (Québec Solidaire) கட்சியில் இணையவுள்ளதாக பூலரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
எதிர்வரும் உக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கியூபெக் மாநிலப் பொதுத்தேர்தலில், மொன்றியலின் கூயின் (Gouin) தொகுதியில் அவர் போட்டியிடவுள்ளார்.
கடந்த 15 ஆண்டுகளாக மத்திய அரசியலில் பணியாற்றிய பூலரிஸ், தற்போது கியூபெக் மாகாணம் எதிர்கொண்டுள்ள வீடமைப்பு நெருக்கடி, சுகாதாரம் மற்றும் கல்விச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்காக, மாகாண அரசியலில் ஈடுபட விரும்புவதாகத் தெரிவித்தார்.
கியூபெக் தற்போது நலமாக இல்லை, அதனைச் சீர்செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டார். கியூபெக்கின் தனித்துவத்தைப் பேணும் கொள்கை உடைய கியூபெக் சொலிடயர் கட்சியில் இணைவதை அவர் ஒரு தாய்வீட்டிற்குத் திரும்புதல் (Homecoming) என வர்ணித்தார்.
இதன் மூலம் கியூபெக் மாநிலத்தில் என்.டி.பி கட்சிக்கு இருந்த ஒரே நாடாளுமன்றப் பிரதிநிதியும் இல்லாமல் போயுள்ளார். அலெக்சாண்டர் பூலரிஸின் இந்த வெளியேற்றம் மத்திய என்.டி.பி கட்சிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தற்போது நாடாளுமன்றத்தில் என்.டி.பி கட்சியின் பலம் 5 இடங்களாகக் குறைந்துள்ளதுடன், ஒன்ராறியோவுக்கு கிழக்கே அந்தக் கட்சிக்கு எவ்வித பிரதிநிதித்துவமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
