கியூபெக்கில் வரவிருக்கும் மாகாணப் பொதுத் தேர்தலில் கனடிய சமஷ்டி அமைப்பை (Federalism) ஆதரிக்கும் வாக்காளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காக ஆளும் ‘கொஅலிஷன் அவனீர் கியூபெக்’ (CAQ) கட்சி பல்வேறு தந்திரங்களை முன்னெடுத்து வருவதாகவும், அவர்களின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என்றும் கியூபெக் லிபரல் கட்சி தெரிவித்துள்ளது.
கியூபெக் லிபரல் கட்சியின் (Quebec Liberal Party) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் (Charles Milliard) வாக்காளர்களுக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
கியூபெக் மாகாண அரசியலில் கனடாவிற்குள் கியூபெக்கின் நிலைப்பாடு, மொழி உரிமை மற்றும் தன்னாட்சி தொடர்பான விவாதங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சார்ள்ஸ் மில்லியார்ட் முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
கியூபெக் மாகாண அரசின் ஆளும் கட்சித் தலைமை, தேர்தலைக் கருத்திற் கொண்டு சமஷ்டி ஆதரவாளர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தங்களை ஒரு மிதமான மற்றும் நடுநிலையான கட்சி போலக் காட்டிக் கொள்ள முயல்கிறது என, அவர் விமர்சித்துள்ளார்.
ஆனால், கடந்த காலங்களில் கனடிய சமஷ்டி கட்டமைப்புக்கு எதிராகவும், ஆங்கிலம் பேசும் சிறுபான்மையினரின் உரிமைகளுக்குப் பாதகமாகவும் அவர்கள் எடுத்த சட்ட முடிவுகளையும் கொள்கைகளையும் வாக்காளர்கள் மறந்துவிடக் கூடாது” என்று சார்ள்ஸ் மில்லியார்ட் சுட்டிக்காட்டினார்.
கியூபெக் தனிநாடாகப் பிரிந்து செல்வதை எதிர்த்து, கனடாவிற்குள் கியூபெக் உறுதியாகவும் தன்னாட்சியுடனும் நீடிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட வாக்காளர்கள் அனைவரும், ஆளும் கட்சியின் போலிப் பிரசாரத்தை நிராகரிக்க வேண்டும் என்றும் கியூபெக் லிபரல் கட்சியின் (Quebec Liberal Party) தலைவர் சார்ள்ஸ் மில்லியார்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

