கனடாவின் முக்கிய விமான சேவை நிறுவனமான WestJet-இன் விமானப் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், பரபரப்பான கோடைகால பயணம் தடைப்பட்டுள்ளது
பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் CUPE தொழிற்சங்கத்திற்கும் WestJet நிறுவனத்திற்கும் இடையே புதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கால்கரியில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், ஊதியம் மற்றும் தரையில் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கான இழப்பீடு உள்ளிட்ட முக்கிய விடயங்களில் இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, தேவையான இடங்களில் பணம் திருப்பி வழங்கப்படும் அல்லது மாற்று பயண ஏற்பாடுகள் செய்து தரப்படும் என WestJet நிறுவனம் தெரிவித்துள்ளது.
WestJet தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சிஸ் வொன் ஹோன்ஸ்புரோக், இந்த நிலைமை குறித்து ஏமாற்றம் தெரிவித்துள்ளதுடன், பயணிகள் மற்றும் சமூகங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை குறைக்க தொடர்ந்து தொழிற்சங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும், விமான பணியாளர்களுக்காக புதிய ஊதிய முன்மொழிவு ஒன்றை நிறுவனம் வழங்கியதாகவும், அதில் முதல் ஆண்டிலேயே இரட்டை இலக்க சதவீத ஊதிய உயர்வு உள்ளிட்ட பல சலுகைகள் இடம்பெற்றிருந்ததாகவும் WestJet தெரிவித்துள்ளது.
எனினும், அந்த முன்மொழிவை தொழிற்சங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை.
WestJet வேலைநிறுத்தம் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தை மீண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

