அமெரிக்க முதியவர்களை இலக்கு வைத்து சுமார் 30 மில்லியன் டொலர்களை மோசடி செய்த கும்பலின் முக்கிய நபரான ஜிம்மி யலிமாகி (Jimmy Ylimaki), நிக்கராகுவாவில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவிற்கு நாடுகடத்தப்பட்டுள்ளார்.
மொன்றியல் நகரப் பகுதியைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய இந்த சர்வதேச மோசடி கும்பல் தொடர்பாக 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிஸார் நடவடிக்கை எடுத்தபோது, 25 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
அவர்களில் ஜிம்மி யலிமாகி மட்டும் பொலிஸாரிடம் சிக்காமல் தப்பியிருந்தார். கோஸ்டாரிகா மற்றும் நிக்கராகுவா ஆகிய நாடுகளில் தலைமறைவாக இருந்த அவர், தற்போது சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டு அமெரிக்காவின் வெர்மான்ட் (Vermont) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
மொன்றியல் நகரத்தில் உள்ள தொலைபேசி அழைப்பகங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் மூலமாகவே அமெரிக்க முதியவர்களிடம் இந்த மோசடிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் 40-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் உள்ள நூற்றுக்கணக்கான முதியவர்கள் இந்த மோசடியால் தமது வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
