மொன்றியலில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வில்லா மரியா (Villa Maria) கல்லூரியின் எதிர்காலம் குறித்த இறுதி முடிவு இன்னும் சில வாரங்களில் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வில்லா மரியா (Villa Maria) பள்ளியின் உரிமையாளர்களான ‘சிஸ்டர்ஸ் ஆஃப் தி கான்ரிகேஷன் ஆஃப் நோட்ரே-டேம்’ (CND) புதிய நிர்வாகக் குழுவை நியமித்துள்ளதைத் தொடர்ந்து இந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சுமார் 170 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்லூரி அமைந்துள்ள 21 ஹெக்டேர் நிலத்தை விற்பனை செய்யப்போவதாக அங்கிருக்கும் அருட்சகோதரிகள் கடந்த ஆண்டு அறிவித்தனர்.
அருட்சகோதரிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதாலும், அவர்களின் சராசரி வயது 82 ஆக இருப்பதாலும் இவ்வளவு பெரிய நிலத்தைப் பராமரிப்பது கடினமாக இருப்பதே இதற்குக் காரணமாகும்.
2030-ஆம் ஆண்டுடன் இந்தக் கல்லூரியின் குத்தகை காலம் முடிவடைய உள்ள நிலையில், வில்லா மரியா பள்ளியின் எதிர்காலம் கேள்விக்குறியானது. நிர்வாக ஆலோசகர் சுசான் குவின் (Suzanne Gouin) தலைமையில் 11 பேர் கொண்ட புதிய குழு தற்போது அமைக்கப்பட்டுள்ளது. 2030-க்குப் பிறகு பள்ளி தொடர்ந்து அங்கேயே இயங்குவதற்குத் தேவையான சட்ட மற்றும் நிதி ரீதியான தீர்வுகளைக் கண்டறிவதற்கு இந்த புதிய நிர்வாகக் குழு முயற்சிக்கும் என்று கூறப்படுகின்றது.
