மொன்றியலில் 2007-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு மர்மக் கொலை வழக்கில், ஏற்கனவே வேறொரு கொலைக்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதி ஒருவரை, முக்கிய குற்றவாளியாகக் காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.
கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் திகதி, லாசால் (LaSalle) பகுதியில் 21 வயதான மார்லன் எஸ்டிக் (Marlon Estick) என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தார். சுமார் 19 ஆண்டுகளாக இந்தக் கொலையைச் செய்தது யார் என்று தெரியாமல் இருந்த நிலையில், தற்போது காந்தி எஸ்டிமே என்பவர் மீது முதற்கட்டக் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மார்லன் கொல்லப்படுவதற்கு சரியாக 18 நாட்களுக்கு முன்பு டோர்வல் (Dorval) பகுதியில் இலியாஸ் எல்-ஹபிபி என்பவரைக் கொலை செய்ததற்காக கைது செய்யப்பட்ட, காந்தி எஸ்டிமே ஏற்கனவே சிறையில் உள்ளார்.
நவீன டி.என்.ஏ. (DNA) பரிசோதனை முறைகள் மற்றும் அண்மையில் கிடைத்துள்ள ஒரு சாட்சியின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில், லாசால் கொலை வழக்கிலும் காந்தி எஸ்டிமேவுக்குத் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலைகள் அந்தப் பகுதியில் இயங்கிய கும்பல்களுக்கு இடையேயான மோதலின் (Gang Rivalry) வெளிப்பாடு எனத் துப்பறியும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மொன்றியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, சிறையில் இருந்தவாறே காணொளி காட்சி மூலம் காந்தி எஸ்டிமே ஆஜர்படுத்தப்பட்டார். தனது மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்காதா என்று 19 ஆண்டுகளாகக் காத்திருந்த மார்லன் எஸ்டிக்கின் குடும்பத்திற்கு, இந்தத் தகவல் ஒரு சிறிய ஆறுதலை அளித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.
