மே 18 ஆம் திகதியை தமிழ் இனப்படுகொலை நினைவு நாளாக, கியூபெக் மாகாணத்தில் உள்ள Côte-des-Neiges–Notre-Dame-de-Grâce நகரம் அங்கீகரித்துள்ளது.
இதனை அங்கீகரித்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய முதல் நகரமாக இந்த நகரம் விளங்குகின்றது.
இது குறித்து உரையாற்றிய உறுப்பினர்கள் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவை பேணப்படுவதற்கான அவசியத்தையும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான உரிமைகள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தையும் வலியுறுத்தினர்.
பெண்களை அழிப்பது என்பது பல தலைமுறைகளுக்கு ஒரு சமூகத்தை அழிப்பதற்குச் சமமாகும் என அவர்கள் குறிப்பிட்டனர்.
இங்கிருக்கும் தமிழ்ப் பெண்களும் இலங்கையில் இருக்கும் தமிழ்ப்பெண்களும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக நகர உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தமிழ் என்பது உலகின் பழமையான மொழி என்றும் தமிழர்கள் உலகின் தொன்மையான சமூகம் என்பதையும் குறிப்பிட்ட அவர்கள், 2022 ஆம் ஆண்டில் கனேடிய மத்திய அரசாங்கம் தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை அங்கீகரித்தமையைச் சுட்டிக்காட்டினர்.