நாட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள சர்வதேச ‘பாதுகாப்பு வங்கி’யின் தலைமையகத்தைப் பெறுவதற்கான போட்டியில், டொராண்டோ நகரம் “அச்சமூட்டும் உத்திகளைக்” கையாள்வதாகக் கியூபெக் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நேட்டோ (NATO) அமைப்பின் ஆதரவுடன் உருவாக்கப்படவுள்ள இந்த ‘தற்பாதுகாப்பு, பாதுகாப்பு மற்றும் மீள்திறன் வங்கி’ (DSRB) கனடாவில் அமையவுள்ளது.
இதன் தலைமையம் அமைக்கப்படும் வாய்ப்பினைக் கைப்பற்றுவதற்கு மொன்றியல், டொராண்டோ மற்றும் வான்கூவர் நகரங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், “கியூபெக் மாகாணம் கனடாவிலிருந்து பிரிந்து செல்லக்கூடும் (Referendum), அதனால் அங்கு முதலீடு செய்வது பாதுகாப்பற்றது” என டொராண்டோ தரப்பு பரப்புரை செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
கியூபெக்கில் எதிர்வரும் தேர்தலில் பிரிவினைவாதக் கண்ணோட்டமுள்ள கட்சி வெற்றி பெற்று, நாட்டைப் பிரிப்பதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தினால் பொருளாதார ஸ்திரத்தன்மை பாதிக்கும் என, டொராண்டோ தரப்பு முதலீட்டாளர்களிடம் கூறி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.
லா ப்ரெஸ் (La Presse) எனும் பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதனை வன்மையாகக் கண்டித்த கியூபெக் அரசியல்வாதிகள், ’டொராண்டோ தனது திறமையைக் காட்ட வேண்டுமே தவிர, மற்றவர்களைக் காண்பித்து பயமுறுத்தக் கூடாது’ எனத் தெரிவித்துள்ளனர்.
கியூபெக்கின் ஆளும் கட்சி முதல் எதிர்க்கட்சிகள் வரை அனைவரும் டொராண்டோவின் இந்தச் செயலைக் கண்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
