கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய Bill 21 மதச்சார்பற்ற சட்டத்திற்கு எதிராக, கனேடிய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை (CCCB) நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
பொதுத்துறை ஊழியர்கள் மதச் சின்னங்களை அணிவதைத் தடை செய்ய மாகாண அரசாங்கத்திற்கு சட்ட ரீதியான அதிகாரம் இல்லை என கத்தோலிக்க ஆயர்கள் இன்று வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்னிலையில் கத்தோலிக்க ஆயர்கள் தரப்பு சட்டத்தரணி பிலிப் எச். ஹோர்கன் தமதுகருத்துகளை முன்வைத்தார்.
கனடாவின் அரசியலமைப்பு மதம் மற்றும் பன்முகத்தன்மைக்கு ஆதரவானது என்று சுட்டிக்காட்டிய அவர், மதம் சார்ந்த விடயங்களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கே உள்ளது எனவும் மாகாண அரசிற்கு அந்த அதிகாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
மதச் சின்னங்களை அணிவது ஒருவரது நம்பிக்கையை வெளிப்படுத்துவது ஆகும் என்று குறிப்பிட்ட கத்தோலிக்க ஆயர்கள் தரப்பு சட்டத்தரணி, அவற்றை கியூபெக் அரசு தடை செய்வதும் ஒரு குறிப்பிட்ட தெய்வீக மறுப்பு கொள்கையை மக்கள் மீது திணிப்பதாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கியூபெக் மாகாண அரசு, தனது சிறப்புநிலை அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தச் சட்டத்தை நீதிமன்ற ஆய்வுக்கு அப்பாற்பட்டதாக மாற்ற முற்பட்டாலும், அடிப்படை மனித உரிமைகளை மீற யாருக்கும் அதிகாரம் இல்லை என மனுதாரர்கள் வாதிட்டனர். நான்கு நாட்களாக நடைபெற்ற இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நீதிமன்ற விசாரணைகள் இன்றுடன் நிறைவடைந்தன. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு இவ்வருட இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
