கியூபெக் மாகாணத்தின் மிக முக்கியமான தேடப்படும் குற்றவாளியான ஜீன்-பிரான்சுவா மாலோ (Jean-François Malo), கரீபியன் கடலில் உள்ள பிரெஞ்சு தீவான மார்டினிக்கில் (Martinique) நேற்று கைது செய்யப்பட்டார்.
வழக்கறிஞர் ஒருவரைக் கொல்ல முயற்சி செய்த வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இவர், கடந்த அக்டோபர் மாதம் முதல் தலைமறைவாக இருந்தார்.
கனடா காவல்துறை இவரைத் தீவிரமாகத் தேடி வந்தது.
இந்த நிலையில், மார்டினிக் தீவில் இவர் செய்த வேறொரு குற்றத்திற்காக, பிரெஞ்சு தீவான மார்டினிக்கின் போலீசாரால் தற்போது சிறையிலடைக்கப் பட்டுள்ளார்.
2020-ஆம் ஆண்டில், கியூபெக் மாகாணத்தில் தனக்கு எதிராகச் சிவில் வழக்கை நடத்திய தேஜார்டின்ஸ் (Desjardins) வங்கி வழக்கறிஞர் நிக்கோலஸ் டாடெலினைத் கொலைசெய்வதற்காக இரண்டு கூலிப்படையினரை, ஜீன்-பிரான்சுவா மாலோ (Jean-François Malo) ஏவியிருந்தார்.
அந்த வழக்கறிஞரின் வீட்டிற்குள் புகுந்த கூலிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், வழக்கறிஞரின் காலில் பலத்த காயம் ஏற்பட்ட போதும் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் கடந்த மே மாதம் மாலோவிற்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டது.
சிறைக்குச் செல்ல வேண்டிய நேரத்தில், மாலோ நீதிமன்றத்திற்கு ஒரு கடிதம் எழுதி, அதில் தனது “உயிருக்கு ஆபத்து” இருப்பதாகக் கூறியதுடன், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார்.
இதனால் இவர் மீது ’கனடா முழுவதுமான தேடுதல் ஆணை (Canada-wide warrant)’ பிறப்பிக்கப்பட்டது.
தற்போது மார்டினிக் போலீசாரின் பிடியில் உள்ள மாலோவை, கனடாவிற்கு நாடு கடத்த (Extradition) கியூபெக் போலீசார் சட்டப்பூர்வ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
