2025-ஆம் ஆண்டு தேர்தலின் போது, தலைவர்களுக்கான நேரடி விவாதத்தில் (Leaders’ Debate) இருந்து கிரீன் கட்சி (Green Party) நீக்கப்பட்ட விவகாரத்தில், தற்போது ஒரு சுமூகமான சமரசம் எட்டப்பட்டுள்ளது.
கனடா மத்திய விவாதக் குழுவும், கிரீன் பார்ட்டியும் இணைந்து இந்தச் சட்டப்பூர்வமான மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம், தலைவர்களுக்கான நேரடி விவாதம் தொடங்குவதற்கு வெறும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக கிரீன் கட்சி, அந்நிகழ்விலிருந்து நீக்கப்பட்டது.
தலைவர்களுக்கான நேரடி விவாதத்தில் ஒரு கட்சி பங்கேற்க வேண்டுமென்றால், குறைந்தது 90 சதவீத தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.
கிரீன் கட்சி வேண்டுமென்றே சில தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்றும், இதனால் அவர்கள் விவாதத்தில் பங்கேற்கும் தகுதியை இழந்துவிட்டதாகவும் விவாத ஏற்பாட்டுக் குழு கூறியது.
“இது ஒரு திட்டமிட்ட ஜனநாயக விரோத நடவடிக்கை என்றும் தங்களது குரலை ஒடுக்கவே இவ்வாறு செய்தார்கள்” என்றும் கிரீன் கட்சித் தலைவர் எலிசபெத் மே, அப்போது குற்றம் சாட்டியிருந்தார்.
எனினும், தற்போது இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்த முரண்பாடு முடிவுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


