ஒன்டாரியோ மாகாணத்தில் நிதிப் பற்றாக்குறையில் (Deficits) இருக்கும் மருத்துவமனைகள் தங்கள் பட்ஜெட்டைச் சரிசெய்வதற்கு மூன்று ஆண்டு காலத் திட்டத்தை உடனடியாக வகுக்குமாறு, மாகாண சுகாதாரத் துறை அமைச்சகம் (Ministry of Health) உத்தரவிட்டுள்ளது.
அரசின் இந்தக் கடுமையான வழிகாட்டுதல்கள், மிகவும் நெருக்கடியான சூழலில் சில மருத்துவமனைகள் தமது சிகிச்சை சேவைகளைக் குறைப்பதற்கோ அல்லது படுக்கை வசதிகளை மூடுவதற்கோ வழிவகுக்கலாம் என்ற கவலையை எழுப்பியுள்ளது.
ஒன்டாரியோ மருத்துவமனை சங்கம் (OHA) வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த நிதியாண்டின் முடிவில் மாகாண மருத்துவமனைகள் மொத்தமாக 360 மில்லியன் டொலர் பற்றாக்குறையைச் சந்தித்துள்ளன.
மேலும், மக்கள் தொகை வளர்ச்சி மற்றும் பணவீக்கத்திற்கு ஈடுகொடுக்க இந்த ஆண்டு மட்டும் கூடுதலாக 1 பில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாகவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது.
