கனடியர்களை “மோசமானவர்கள்” என அமெரிக்க ஜனாதிபதி கருதுவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் தெரிவித்த கருத்துக்கு, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கான பயணம் மற்றும் அமெரிக்க மதுபானங்களைப் பயன்படுத்தல் முதலானவற்றை கனேடிய மக்கள் அண்மைக்காலமாக புறக்கணித்து வருகின்றனர்.
இந்த புறக்கணிப்புச் செயற்பாடு காரணமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கனேடிய மக்களை “மோசமானவர்கள்” என்று கருதுவதாக, கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் பீட் ஹோக்ஸ்ட்ரா கருத்து வெளியிட்டிருந்தார்.
வொஷிங்டனில் நடைபெற்ற வருடாந்திர பசிபிக் வடமேற்கு பொருளாதார பிராந்திய அறக்கட்டளை உச்சிமாநாட்டில் உரையாற்றும் போதே, இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களை கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் வெளியிட்டார்.
இந்த கருத்து வெளிப்பாடு குறித்தே, பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
“கனடாவை 51வது மாநிலமாக மாற்றி, அமெரிக்காவுக்கு அடிபணியாவிட்டால், பொருளாதார ரீதியாக அவர்களை அச்சுறுத்த விரும்புகிறேன் என்று அமெரிக்க ஜனாதிபதி கூறும்போது, கனடியர்கள் பதிலளிக்க மாட்டார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்களா?” என்ற கேள்வியை பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதல்வர் டேவிட் எபி எழுப்பியுள்ளார்.
மேலும் “கனடியர்கள் வெளிப்படையாகவே சீற்றமடைந்துள்ளனர்,” என்றும் டேவிட் எபி தெரிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் கனடாவின் பொருட்களுக்கு அதிக வரிகளை விதித்ததைத் தொடர்ந்து, பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல கனேடிய மாகாண அரசுகள், தாம் நடத்தும் கடைகளில் அமெரிக்க மதுபானங்களின் விற்பனையைத் தடை செய்துள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.
