ஒன்டாரியோ மாகாண காவல்துறை அதிகாரிகள் என்று தெரியாமல் அவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, கொலைக் குற்றவாளி அலைன் பெல்ஃபூயில் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
காவல்துறை அதிகாரிகள் தனது வீட்டிற்குள் நுழைந்தபோது அவர்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தவர்கள் என்று தாம் எண்ணியதாக, அலைன் பெல்ஃபூயில் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாகவே, அவர்கள் மீது தாம் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக, அவர் தமது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் காவல்துறை அதிகாரிகள் என்று தமக்குத் தெரியாது எனவும் அது தெரிந்திருக்குமாயின் தாம் பயந்திருக்க மாட்டேன் எனவும் அலைன் பெல்ஃபூயில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி ஒன்டாரியோவின் போர்கெட் நகரில் காவல்துறை சார்ஜன்ட் எரிக் முல்லரை கொலை செய்ததாகவும், மேலும் இரு காவல்துறை அதிகாரிகளான கொன்ஸ்டபிள் மார்க் லோஸோன் மற்றும் கொன்ஸ்டபிள் பிரான்சுவா காமாச்-அஸ்ஸெலின் ஆகியோரை காயப்படுத்தியதாகவும் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அலைன் பெல்ஃபூயில் தமது சாட்சியத்தை பிரெஞ்சு மொழியில் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.