இந்தியாவின் கேரளா மாநிலத்தில், பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஜலந்தர் முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிராக, கன்னியாஸ்திரிகளை
திரட்டி போராட்டம் நடத்திய அனுபமா, தன் கன்னியாஸ்திரி பணியை துறந்து சாதாரண வாழ்க்கைக்கு திரும்பினார்.
கேரளாவின் கோட்டயம் அருகே குருவிளங்காட்டில் உள்ள பழமையான தேவாலயம் பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் மறைமாவட்டத்தின் கீழ் செயல்பட்டது.
அந்த மறைமாவட்டத்தின் பிஷப்பாக பிராங்கோ முலக்கல் பதவி வகித்தார். அவர் பதவியில் இருந்த 2014 — 16 காலக்கட்டத்தில் கேரளாவுக்கு பயணம்
செய்தார்.
அப்போது கன்னியாஸ்திரியரை மிரட்டி, பலாத்காரம் செய்ததாக அவர் மீது 2018ல் புகார் எழுந்தது. பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பிஷப் பிராங்கோவை கண்டித்து, கன்னியாஸ்திரி அனுபமா தலைமையில் அப்போது பெரியளவில் போராட்டம் நடந்தது. இதனையடுத்து அவரை காவல்துறை கைது செய்தது.
எனினும், அவர் மீதான வழக்கை விசாரித்த கோட்டயம் மாவட்ட நீதிமன்றம், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் அவரை வழக்கில் இருந்து
விடுவித்தது. அவரை விடுவித்த அந்த தீர்ப்புக்கு எதிராக கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது பிஷப் பிராங்கோவுக்கு எதிராக போராட்டம் நடத்திய அனுபமா, திடீரென கன்னியாஸ்திரி பணியை துறந்து குருவிளங்காடு கான்வென்ட்டிலிருந்து வெளியேறி, குடும்பத்துடன் இணைந்துள்ளமை குறிப்பிடத் தக்கது.
