நாட்டில் உள்ள பழைய புத்தகக் கடைகளுக்குத் (Used Bookstores) விசித்திரமான முறையில் பாரிய அளவில் புத்தகங்களைக் கொள்வனவு செய்வதற்கான (Bulk Orders) கொள்முதல் கோரிக்கைகள் அதிகரித்து வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மென்பொருள்களுக்குப் பயிற்சியளிப்பதற்காகப் பழைய அச்சிடப்பட்ட புத்தகங்களை வாங்கி, அவற்றின் பக்கங்களைப் பிரதியெடுத்துப் (Scanning) பின்னர் புத்தகங்களை அழித்து வருவதாக எழுந்துள்ள சந்தேகங்கள், கனடியப் புத்தக விற்பனையாளர்கள் மத்தியில் கடும் கவலையையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ரொறன்ரோவிலுள்ள செல்லர்ஸ் நியூவெல் (Sellers & Newel) புத்தகக் கடையின் உரிமையாளர் பீட்டர் செல்லர்ஸ் உட்படப் பல
விற்பனையாளர்கள், அண்மைய மாதங்களாக எந்தவிதத் தெளிவான காரணமும் இன்றிப் பலதரப்பட்ட பழைய புத்தகங்களைக் கேட்டும்
தொடர்ச்சியாக தொலைபேசி மற்றும் மின்அஞ்சல் கோரிக்கைகள் வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாகத் திரைப்படப் படப்பிடிப்புகள் அல்லது இல்லங்களை அலங்கரிப்பவர்களே (Interior Designers) பெருமளவில் புத்தகங்களைக் கொள்வனவு செய்வார்கள் என்று தெரிவித்த, பழைய புத்தக விற்பனையாளர்கள், , தற்போதைய கொள்முதல் கோரிக்கைகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனையாகாமல் கடைகளில் தேங்கிக்கிடந்த பழைய மருத்துவ நூல்கள், உயர்கல்வி கணிதம் மற்றும் இயற்பியல் நூல்கள் போன்றவை குறிப்பிடப்பட்டு பெருமளவில் கேட்கப்படுகின்றதாகக் கூறியுள்ளனர்.
தரவுப் பொறியியல் நிறுவனங்களின் பிரதிநிதிகள் என்ற பெயரிலும், அடையாளம் தெரியாத நிறுவனங்களின் பெயரிலும் இக்கோரிக்கைகள் முன்வைக்கப்படுவதாக விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அமெரிக்காவின் பிரபல செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic) மீது எழுத்தாளர்களால் தொடரப்பட்ட பதிப்புரிமை வழக்கில் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானது. அந்நிறுவனம் மில்லியன் கணக்கில் இயற்பியல் புத்தகங்களைச் சந்தையில் வாங்கி, அவற்றின் பின்னட்டையைப் பிரித்தெடுத்து விரைவாகப் பக்கங்களைப் பிரதியெடுத்துத் (destructive scanning) தனது குளோட் (Claude) AI மாதிரிகளுக்குப் பயிற்சியளித்த பிறகு, அந்தப் புத்தகங்களை அழித்ததாக நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
இணையத்தில் கிடைக்கும் டிஜிட்டல் தகவல்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட போலியான நூல்கள் அதிகளவில்
நிறைந்துள்ளதாலும், 2022-க்கு முன்னர் அச்சிடப்பட்ட இயற்பியல் புத்தகங்கள் மனிதர்களால் மட்டுமே எழுதப்பட்ட உண்மையானத்
தகவல்களைக் கொண்டுள்ளதாலும், AI நிறுவனங்கள் இத்தகைய பழைய புத்தகங்களை நோக்கிய தங்களது பார்வையைத் திருப்பியுள்ளன.
இதன் காரணமாக, முறையான அடையாளச் சான்றுகள் மற்றும் தெளிவான காரணங்கள் இல்லாத நபர்களுக்கு, பெருமளவில் புத்தகங்களை விற்பனை செய்வதில்லை எனப் பல கனடியப் புத்தகக் கடை உரிமையாளர்கள் தற்போது தீர்மானம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



