கனடாவின் சிறுவர் சீருடைப் பயிற்சித் திட்டம் (Cadet Program) மற்றும் அதில் பங்கேற்ற பெண் சிறுமிகளின் தோற்றம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் சமூக ஊடகத்தில் பதிவிட்ட அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத்தின் (Pete Hegseth) நடவடிக்கைக்கு அமெரிக்க பாதுகாப்புத், தலைமையகமான பென்டகன் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளரின் இந்தச் செயல் மிகக் கீழ்த்தரமானது என்றும், அரசு உயர் பதவிகளுக்கு அழகல்ல என்றும் கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக ஊடகப் பக்கத்தில் புகைப்பட கலவை ஒன்றை அமைத்து பதிவொன்றை வெளியிட்டார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வெர்னான் பகுதியில் இயங்கும் கனடிய கேடட் பயிற்சி மையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில், சீருடை அணிந்த இரண்டு இளம் பெண் கேடட்கள் இடம்பெற்றிருந்தனர்.
கனடிய ஆயுதப்படைகளின் தகுதியையும், பயிற்சி பெறும் இளம் பெண்களின் உடல் தோற்றத்தையும் கேலி செய்து இழிவுபடுத்தும் வகையில் இதுதான் உண்மை என்ற குறிப்புடன் கனடியக் கொடியையும் இணைத்து ஹெக்செத் அந்தப் படத்தை பகிர்ந்திருந்தார்.
சிறுவர் மற்றும் இளைஞர்களுக்கான ஒரு தன்னார்வப் பயிற்சித் திட்டத்தைக் குறிவைத்து, அதில் பங்கேற்கும் இளம் பெண்களைப் பகிரங்கமாக இழிவுபடுத்திய இந்த நடவடிக்கை கனடாவிலும் சர்வதேச அளவிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் குறித்து வாஷிங்டனில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த பென்டகனின் துணைப் பத்திரிகைச் செயலாளர் ஜேக்கப் பிளிஸ் (Jacob Bliss), "எக்ஸ் தளத்தில் இடப்பட்ட அந்தப் பதிவு தனக்கான விளக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது எனக் கூறி, ஹெக்செத்தின் நடவடிக்கையை நியாயப்படுத்தினார்.
பென்டகனின் இந்த நிலைப்பாட்டைத் தொடர்ந்து ஒட்டாவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் மார்க் கார்னி அமெரிக்க
நிர்வாகத்திற்கு கடும் தொனியில் பதில் கொடுத்துள்ளார்.
அமெரிக்க உயர் அதிகாரிகள் மீம்களை உருவாக்குவது, பிறரை இழிவுபடுத்துவது, போலியாகக் துணிவு காட்டுவது போன்ற
சிறுபிள்ளைத்தனமான வேலைகளை நிறுத்திவிட்டு, பொறுப்பான முறையில் பேச்சுவார்த்தைகளுக்கு முன்வர வேண்டும் என, பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.
கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் அண்மையில் முறிந்ததைத் தொடர்ந்து இரு
நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது. வர்த்தகப் போரின் பின்னணியில் அமெரிக்கப் பிரதிநிதிகள் கனடாவை இலக்கு வைத்துத் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், ஹெக்செத்தின் இந்தச் சமூக ஊடகப் பதிவு இரு நாட்டுப் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.



