ஒட்டாவாவில் உள்ள தேசிய ஹோலோகாஸ்ட் நினைவுச் சின்னத்தில், சிவப்புச் சாயத்தால் தீட்டப்பட்டு “Feed Me” என்று எழுதப்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, நேற்று அவ்விடத்தில் ஒரு மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
அதன்போது, வெறுப்புக் குற்றங்களுக்கு எதிராகப் போராட ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பும் விடுக்கப்பட்டது.
கடந்த ஜூன் 9 ஆம் திகதி காலை, லெப்ரெட்டன் பிளாட்ஸ் அருகே உள்ள கிச்சி ஜிபி மிகான் பகுதியில் அமைந்துள்ள இந்த நினைவுச் சின்னத்தில் சிவப்புச் சாயம் பூசப்பட்டிருப்பதும், “FEED ME” என்ற வார்த்தைகள் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தச் செயலை யார் செய்தார்கள் அல்லது அவர்களின் நோக்கம் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், “Feed Me” என்ற முழக்கம், “உலகின் மிக அதிகமாகப் பசியால் வாடும் இடம்” என்று ஐக்கிய நாடுகள் சபை விவரித்துள்ள காசா பகுதியைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது.
இந்தச் செயல் யூத எதிர்ப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று ஒட்டாவாவின் முக்கியப் பிரமுகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அவர்களில் ஒட்டாவா சென்டர் நாடாளுமன்ற உறுப்பினர் யாசிர் நக்வி, ஒட்டாவா சென்டர் மாகாண சபை உறுப்பினர் கேத்தரின் மெக்கென்னி மற்றும் தேசிய ஹோலோகாஸ்ட் நினைவுச் சின்னக் குழுவின் இணைத் தலைவரும் பிரபல ஒட்டாவா பாதுகாப்பு வழக்கறிஞருமான லாரன்ஸ் கிரீன்ஸ்பான் ஆகியோர் அடங்குவர்.
நேற்று நடந்த நிகழ்வில் பேசிய கிரீன்ஸ்பான், இந்தச் செயலை “யூத சமூகத்திற்கு நடந்த ஒரு பயங்கரமான நிகழ்வு” என்றும், தனிப்பட்ட ரீதியில் மிகுந்த வேதனையை அளித்ததாகவும் கூறினார்.


