கியூபெக் மாகாண பொதுத்தேர்தல் பிரசாரம் உத்தியோகபூர்வமாகத் தொடங்கியுள்ள நிலையில், பழங்குடியினப் பெண்களை இழிவுபடுத்தும் இனவாதச் சொல்லைப் பயன்படுத்திய தனது கட்சியின் வேட்பாளர் பிரான்சுவா காரியேபியைத் (François Gariépy) தொடர்ந்தும் தேர்தலில் போட்டியிட அனுமதிப்பதாக பார்ட்டி கியூபெக்வா (PQ) கட்சி அறிவித்துள்ளது.
கியூபெக் மாகாணச் சட்டமன்றத் தேர்தல் ஒக்டோபர் 5ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், சார்லெவோய்-கோட்-டி-போப்ரே (Charlevoix-Côte-de-Beaupré) தொகுதியில் பார்ட்டி கியூபெக்வா கட்சி சார்பில் வானொலிச் செய்தி தொடர்பாளரான பிரான்சுவா காரியேபி வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, இணையவழி ஒலிபரப்பு (Podcast) ஒன்றில் உரையாடிய பிரான்சுவா காரியேபி, பழங்குடியினப் பெண்களைக் குறிக்கப் பயன்படும் “ஸ்கவா” (Squaw) எனும் இனவாத மற்றும் பாலின ரீதியிலான இழிவுச் சொல்லைப் பயன்படுத்தியமை தற்போது தெரிய வந்துள்ளது.
இச்சொல் வட அமெரிக்க பழங்குடியின சமூகத்தினரால் மிகவும் புண்படுத்தக்கூடிய சொல்லாகக் கருதப்படுகிறது.
இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பிரான்சுவா காரியேபி, “தான் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியதற்காக வருந்துவதாகவும், பழங்குடியின மக்களைக் காயப்படுத்தும் நோக்கம் தனக்கு இருக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய பார்ட்டி கியூபெக்வா கட்சியின் தலைவர் போல் செயிண்ட்-பியர் பிளமொண்டன் (Paul St-Pierre Plamondon), காரியேபியின் பேச்சு தவறு என்பதை ஒப்புக்கொண்டதாலும், அவர் தனது தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளதாலும், அவரை வேட்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்போவதில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார்.
பார்ட்டி கியூபெக்வா கட்சியின் இந்த நடவடிக்கைக்குக் கியூபெக் மற்றும் லாப்ரடோர் பழங்குடியின தேசிய அவையின் தலைவர் பிரான்சிஸ் வெரோ-போல் (Francis Verreault-Paul) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

