நயாகரா ஃபால்ஸ் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுப் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களில் ஒருவரை மொன்றியல் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நயாகரா பிராந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், நயாகரா ஃபால்ஸ் நகரின் தோரோல்ட் ஸ்டோன் வீதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் 35 வயதான மிட்செல் ஸ்னோடன் (Mitchell Snoddon) என்பவர் துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இக்கொலை வழக்கு தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வந்த நயாகரா பிராந்திய பொலிஸாரின் (NRPS) கொலை வழக்கு விசாரணைப் பிரிவு, இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களைத் தேடி வந்தது.
இந்த நிலையில், மொன்றியல் நகரக் காவல் துறையினர் (SPVM) நடத்திய தேடுதல் வேட்டையில், சந்தேகநபர்களில் ஒருவரான 30 வயதான ஜோஸ்டா மெக்நீல் (Josta Grace MacNeal) என்பவரை மொன்றியலில் வைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ஜோஸ்டா மெக்நீல், விரைவில் நயாகராவுக்கு கொண்டுசெல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

