சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் ஏற்கனவே தண்டனை பெற்ற மொன்றியலைச் சேர்ந்த முன்னாள் பாதிரியார் ஒருவர், சிறுவர் ஆபாசப் படங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கியூபெக் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, 71 வயதான முன்னாள் கத்தோலிக்க பாதிரியாரான பிரையன் பௌச்சர் (Brian Boucher) இந்த புதிய குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.
மொன்றியல் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையைத் தொடர்ந்தே இவர் மீது இந்த புதிய வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அவர் மீது சிறுவர் ஆபாசப் பொருட்களை அணுகியமை, அவற்றை வைத்திருந்தமை மற்றும் அவற்றை விநியோகித்தமை உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
முன்னதாக, 2019 ஆம் ஆண்டு இரு சிறுவர்களைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்திற்காக பௌச்சருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1990 முதல் 2000 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில், பாதிரியாராகப் பணியாற்றியபோது, தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 11 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் மீது இக்கொடூரச் செயலை அவர் புரிந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.
சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், அவருக்குப் பின்னர் நிபந்தனை பிணை வழங்கப்பட்டது.
எனினும், அவர் மீதான புதிய குற்றச்சாட்டுகள் குறித்த தகவல்கள் அண்மையில் வெளிவந்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவரது இருப்பிடத்தைச் சோதனையிட்டு பல மின்னணு சாதனங்களைக் கைப்பற்றினர்.
அச்சாதனங்களைப் பரிசோதித்தபோதே சிறுவர் ஆபாசப் படங்கள் கண்டெடுக்கப்பட்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கியூபெக் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பௌச்சர், தற்போதைக்குக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

