மொன்றியல் நகரசபைக்கு (Montreal City Hall) வெளியே அமைதியான முறையில் நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தின் போது, செய்திச் சேகரிப்பில் ஈடுபட்டிருந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று மொன்றியல் நகரசபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, நகரசபைக் கட்டிடத்திற்கு வெளியே திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நகரசபைக் கூட்டத் தொடரில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவான தீர்மானம் திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகக் கவுன்சிலர் நாதலி குலே (Nathalie Goulet) வெளியே வந்து அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, வெளியே காத்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அவரைக் கட்டிப்பிடித்து நன்றி தெரிவித்தனர்.
இருப்பினும், மொன்றியல் நகராட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் “இனப்படுகொலை” (Genocide) என்ற வார்த்தை நீக்கப்பட்டதற்குப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கடும் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டனர்.
இந்தச் சூழலில் அங்கு செய்திச் சேகரித்துக்கொண்டிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களுடன் சில ஆர்ப்பாட்டக்காரர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, புகைப்படக் கலைஞர் ஒருவரை நோக்கி வந்த நபர் ஒருவர் அவரைத் தாக்கிய காட்சிகள் அங்கு எடுக்கப்பட்ட காணொளியில் பதிவாகியுள்ளன.
பொது இடத்தில் செய்திச் சேகரிக்க வந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து மொன்றியல் நகரப் பொலிஸார் (SPVM) உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

