கியூபெக் மாகாண வரலாற்றிலேயே மிக மோசமான தரவுத் திருட்டாகக் (Data Breach) கருதப்படும் ‘டெஸ்ஜார்டின்ஸ் மெகா மோசடி’ வழக்குடன்
தொடர்புடைய, தேடப்படும் குற்றவாளியான மாக்சிம் பாக்கெட் (Maxime Paquette), மெக்ஸிகோவில் வைத்துப் பொலிஸாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கியூபெக் மாகாணப் பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த 40 வயதுடைய மாக்சிம் பாக்கெட், மெக்ஸிகோவின் கான்கன் (Cancún) நகரில்
வைத்து அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனேடிய அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு நிகழ்ந்த ‘டெஸ்ஜார்டின்ஸ் நிதி நிறுவனம்’ மீதான சைபர் தாக்குதல் மற்றும் பல மில்லியன் டொலர் நிதி மோசடி
விசாரணைகளின் கீழ், 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் இவர் தலைமறைவாக இருந்து வந்தார்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள இவரைக் கனடாவுக்குக் கொண்டு வருவதற்கான நாடுகடத்தல் (Extradition) சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை அவர் மெக்ஸிகோ சிறையிலேயே காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடியக் குற்றவியல் சட்டத்தின் கீழ் மாக்சிம் பாக்கெட்டிற்கு எதிராகப் பல்வேறு பாரதூரமான பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 5,000 டொலருக்கும் அதிகமான நிதி மோசடி, அடையாளத் திருட்டு (Identity theft) மற்றும் பிறரின் தனிப்பட்ட அடையாளத் தரவுகளைச் சட்டவிரோதமாகக் கையாளுதல் ஆகிய குற்றச்சாட்டுகளை இவர் எதிர்கொண்டுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜூன் மாத காலப்பகுதியில், டெஸ்ஜார்டின்ஸ் வாடிக்கையாளர்களின் திருடப்பட்ட ரகசியப் பட்டியலை இவர் தன்வசம்
வைத்திருந்ததுடன், அதனைப் பல தனிநபர்களுக்கும் மற்றும் இணையத்தின் சட்டவிரோதப் பகுதியான ‘டார்க் வெப்’ (Dark Web) மூலமும் விற்பனை செய்துள்ளார் எனப் பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

