கனடிய ஆயுதப்படைகள் மற்றும் பாதுகாப்புத் திணைக்களத்தின் (DND) பணித் தளங்களில் நடைமுறையிலுள்ள மொழிப் பயன்பாட்டு வழிகாட்டல் தொடர்பாகச் சர்ச்சைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அது குறித்து விரிவான மீளாய்வை மேற்கொள்ளுமாறு கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டி (David McGuinty) உத்தரவிட்டுள்ளார்.
2025 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த வழிகாட்டல், பிரெஞ்சு மொழிக்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் பலவீனப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் மொழி உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் அமைச்சர் டேவிட் மெக்கின்டி, இந்த விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள கவலைகளைத் தாம் தீவிரமாகக் கருத்தில் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
“பணித்தள மொழித் தேவைகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதையும், தற்போதைய அணுகுமுறை செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பாதுகாப்புப் படையினரின் மொழி உரிமைகளை மதிக்கிறதா என்பதையும் இந்த மீளாய்வு விரிவாக ஆராயும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடு முழுவதிலும் பிரெஞ்சு மொழியைப் பாதுகாப்பதும் ஊக்குவிப்பதும் அரசாங்கத்தின் கடமையாகும் எனச் சுட்டிக்காட்டிய அமைச்சர், பொதுமக்களுக்கான சேவைகள், இராணுவக் குடும்பங்களுக்கான உதவிகள் மற்றும் பயிற்சிகள் தொடர்ந்து ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு ஆகிய இரு உத்தியோகபூர்வ மொழிகளிலும் தடையின்றி வழங்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.

