மொன்றியல் நகரில் ‘பென்டானில்’ (Fentanyl) மற்றும் அதைவிடப் பல மடங்கு வீரியமிக்க ‘கார்பென்டானில்’ (Carfentanil) முதலான ஆபத்தான போதைப்பொருட்களின் பாவனையால், மரணங்கள் மற்றும் கடுமையான உடல்நலப் பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளதாகப் பொதுச்சுகாதார அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மொன்றியல் பிராந்திய பொதுச்சுகாதாரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கடந்த ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் பதிவான சந்தேகத்திற்கிடமான மரணங்களில், குறைந்தது 8 பேரின் மரணத்திற்குக் ‘கார்பென்டானில்’ என்ற ஆபத்தான போதைப்பொருளே காரணம் என ஆய்வகப் பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
நச்சியல் (Toxicology) பரிசோதனை முடிவுகள் வெளிவர தாமதமாவதால், இந்த மரணங்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். இந்த ஆண்டின் ஜனவரி முதல் தற்போது வரை மாத்திரம் போதைப்பொருள் பாவனை காரணமாகப் பாதிக்கப்பட்ட 925 பேருக்கு அவசர மருத்துவக் குழுக்களால் ‘நெலோக்சோன்’ (Naloxone) என்ற நச்சுமுறி மருந்து செலுத்தப்பட்டுள்ளது.
இது கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதிலும் பதிவான மொத்த அவசர சிகிச்சை விபரங்களை விட அதிகமாகும். தற்போது கண்டறியப்பட்டுள்ள ‘கார்பென்டானில்’ என்ற செயற்கை ஓபியாய்டு (Synthetic Opioid) வகை போதைப்பொருள், ஏற்கனவே ஆபத்தானதாகக் கருதப்படும் ‘பென்டானில்’ போதைப்பொருளை விட 100 மடங்கு அதிக வீரியம் கொண்டதாகும் எனவும் இதன் மிகச் சிறிய அளவே ஒருவரைக் கொல்லப் போதுமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கறுப்புச் சந்தையில் ‘பென்டானில்’ என்ற பெயரில் விற்கப்படும் போதைப்பொருள் கற்கள் மற்றும் தூள்களில், இந்த கார்பென்டானில் கலக்கப்படுவதுடன், ‘மெடெட்டோமிடைன்’ (Medetomidine) எனப்படும் கால்நடை மயக்க மருந்தும், சில நேரங்களில் ‘பென்சோடியாசெபைன்கள்’ (Benzodiazepines) போன்ற மனஅமைதி மருந்துகளும் ஆபத்தான முறையில் கலக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

