ஜப்பானில் எதிர்பார்க்கப்படுகின்றதை விட குழந்தை பிறப்பு வீதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அந் நாட்டு அரச தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
இதனடிப்படையில் 2024 ஆம் ஆண்டு 6,86,061 குழந்தைகள் பிறந்துள்ளன.
இது 2023ஆம் ஆண்டிலும் பார்க்க 5.7 சதவீதம் குறைவாகும்.
7 இலட்சத்திற்கும் குறைவாகக் குழந்தைகள் 1899ஆம் ஆண்டுக்குப் பிறகு முதன்முறையாக பிறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாம் உலகப் போருக்குப்பின்பு , குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டதன் மூலம் 27 இலட்சம் குழந்தைகள் பிறந்தன.
வயது மூப்பு அதிகரித்து வருவதன் காரணமாகவும் மற்றும் மக்கள் தொகை சுருங்கி வருவதன் காரணமாகவும் ஜப்பானின் பொருளாதார மற்றும் தேசிய பாதுகாப்பு நிலைத்தன்மை காரணமாகவும் குழந்தை பிறப்பு வீதம் சரிவை எதிர்நோக்கி இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
இந்த சூழ்நிலையில் ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா, திருமண தம்பதிகள் வேலை மற்றும் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் வகையில் வேலை செய்யும் இடத்தில் மேலும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.
ஆசிய நாடுகளில் வயது மூத்த மக்கள் தொகையை அதிகமாக கொண்ட நாடாகவும், குழந்தை பிறப்பு வீதத்தை மிகவும் குறைந்த அளவிலும் கொண்ட நாடாக ஜப்பான் மாறியுள்ளது.
தென் கொரியா மற்றும் சீனா போன்ற நாடுகள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளவும் குடும்பங்களை ஊக்குவிக்கவும் கடுமையாக போராடி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
