யாழ்ப்பாணத்திற்கு “பார்சல் சேர்விஸ்” ஊடாக வாசனை சவர்க்காரத்திற்குள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்திற்கு பார்சல் சேர்விஸ் ஊடாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இருந்தனர்.
அந்நிலையில் யாழ். நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள “பார்சல் சேர்விஸ் “நடத்தும் வர்த்தக நிலையத்திற்கு வெளிமாவட்டத்தில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் வாசனை சவர்க்காரம் வந்துள்ளது.
அது தொடர்பில் பொலிஸார் அறிந்து , பார்சலை பெற வருகை தரவிருந்தவருக்கு காவல் இருந்து , அந்நபர் பார்சலை பெற வந்த போது , அவரை கைது செய்து, பார்சலை சோதனையிட்டுள்ளனர்.
அதன் போது பார்சலுக்குள் காணப்பட்ட சவர்க்கரத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 7 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அதனை அடுத்து கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், பார்சலை அனுப்பிய நபர் தொடர்பிலும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

