சீக்கியப் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான எவ்வித ஆதாரமும் தற்போதைய கூட்டுப் புலனாய்வில் கண்டறியப்படவில்லை என, றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இது, முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் தத்தளிப்பை ஏற்படுத்திய அரசியல் குற்றச்சாட்டுகளில் இருந்து கனடா பின்வாங்குவதைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பியப் பாதுகாப்பு முகவரகங்கள் இணைந்து நடத்திய ‘ஒபரேஷன் ஹார்ட்பால்’ (Operation Hard Ball) என்ற சர்வதேசக் கூட்டு நடவடிக்கை மூலம், இந்தியாவில் சிறையில் இருக்கும் பிரபல நிழல் உலகக் குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய் மற்றும் அவனது பங்காளர் கோல்டி ப்ரார் ஆகியோர் மீது, நிஜ்ஜார் படுகொலை தொடர்பில்
குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இச்சூழ்நிலையில், கனேடிய ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய, றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களத்தின் துணை ஆணையர் லிசா மோர்லாண்ட் (Lisa Moreland), “இந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள் மீதான விசாரணையிலோ அல்லது நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையிலோ,
இந்திய அரசு அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான எந்த ஆதாரமும் வெளிவரவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
றோயல் கனேடிய மவுண்டட் பொலிஸ் (RCMP) திணைக்களத்தின் துணை ஆணையர் லிசா மோர்லாண்டின் இந்த கருத்து, நாட்டின் முன்னைய அரசியல் மற்றும் உளவுத்துறை நிலைப்பாடுகளுடன் முற்றிலும் முரண்படுவதாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கனேடியப் பொலிஸாரின் இந்தத் திடீர் நிலைப்பாடு குறித்து, கனடாவில் உள்ள சீக்கிய கூட்டமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன.

