பிரதமர் மார்க் கார்னியின் கனோலா விவசாயிகளுக்கான புதிய நிதி உதவி, கனோலா தொழில்துறையின் தற்போதைய தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிவிட்டதாக கனடா கனோலா கவுன்சிலின் தலைவர் கிரிஸ் டேவிசன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் சீனா கனடாவின் கனோலா ஏற்றுமதிகள் மீது விதித்துள்ள கடுமையான வரியை அடுத்து, கனடாவின் கனோலா தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் கார்னி கடந்த வெள்ளிக்கிழமை கனோலா உற்பத்தியாளர்களுக்கு உதவ 370 மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியுதவியை அறிவித்திருந்தார்.
மேலும், கனடாவின் தூய எரிபொருள் விதிமுறைகளில் (Clean Fuel Regulations) திருத்தங்களை மேற்கொண்டு, உயிரி எரிபொருள் (biofuel) உற்பத்தியை ஊக்குவிப்பதாகவும், கனோலா விவசாயிகளுக்கான கடன் வரம்பை 500,000 டொலர் ஆக உயர்த்துவதாகவும் பிரதமர் கார்னி அறிவித்தார்.
இந்நிலையில், “கனோலா உற்பத்திச் சங்கிலியில் உள்ள அனைத்துத் துறைகளும் எதிர்கொள்ளும் கடுமையான தாக்கத்தை அரசாங்கம் முறையாக உணர்ந்து கொள்ளவில்லை” என, கிரிஸ் டேவிசன் விமர்சித்துள்ளார்.
கனோலா ஏற்றுமதியாளர்கள் மற்றும் ஆலை நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் தற்போது பெரும் நெருக்கடியில் உள்ளதாகவும் அதற்கான எந்தத் தீர்வும் அரசின் அறிவிப்பில் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
