மாகாணங்களின் உள்விவகாரங்களில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் தன்னிச்சையான தலையீடுகளை, கூட்டாக எதிர்ப்பதென, கியூபெக் மற்றும் அல்பர்ட்டா மாகாண அரசுகள், வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டு முடிவு ஒன்றை மேற்கொண்டுள்ளன. கியூபெக் மாகாணத் தலைநகரான கியூபெக் சிட்டியில் நடைபெற்ற உயர் மட்ட இராஜதந்திரச் சந்திப்பில், கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) மற்றும் அல்பர்ட்டா மாகாண முதல்வர்
டேனியல் ஸ்மித் (Danielle Smith) ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளில் முற்றிலும் மாறுபட்ட இரு துருவங்களாகக் கருதப்படும் கியூபெக் மற்றும் அல்பர்ட்டா ஆகிய மாகாணங்களின் முதல்வர்கள், மத்திய அரசின் ஆதிக்கத்திற்கு எதிராக ஒரே புள்ளியில் இணைந்துள்ளனர். சுகாதாரம், வீடமைப்பு மற்றும் பொதுப் போக்குவரத்து முதலான மாகாண அதிகார வரம்பிற்குட்பட்ட (Provincial Jurisdiction) துறைகளில், மத்திய அரசு நிதிப் பகிர்வை நிபந்தனைகளுடன் திணிப்பதாகவும் அதன் மூலம் மாகாணங்களின் தன்னாட்சி உரிமைகளைப் பறிப்பதாகவும் இரு மாகாண முதல்வர்களும் குற்றம் சாட்டினர்.
இந்த இராஜதந்திரச் சந்திப்பின் முடிவில், மாகாண தன்னாட்சி உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த கூட்டு முடிவினை, இரு மாகாண முதல்வர்களும் ஏற்றுக்கொண்டுள்ளனர். மத்திய அரசானது மாகாணங்களுக்கு நிதி வழங்க விரும்பினால், அதனை எவ்வித நிபந்தனைகளும் இன்றி வழங்குவதோடு, மாகாணங்களின் முன்னுரிமைகளுக்கு ஏற்ப அந்த நிதியைப் பயன்படுத்த முழு அதிகாரத்தையும் வழங்க வேண்டும் என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
வழமையாகக் கனேடியக் கூட்டமைப்பில் தனித்துவமான அரசியல் பாதையைக் கொண்ட கியூபெக் மற்றும் இயற்கை வளங்களை முதன்மையாகக் கொண்ட அல்பர்ட்டா முதலான இரு மாகாணங்களும் இந்த விடயத்தில் கரம் கோர்த்துள்ளமை, கனேடிய அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது. மத்திய அரசு அண்மையில் அறிவித்த உள்கட்டமைப்பு மற்றும் சமூக நல நிதியுதவிகள், நாட்டின் மாகாணங்களின் சொந்தத் திட்டங்களை முடக்கும் வகையில் உள்ளதாக இரு முதல்வர்களும் சுட்டிக்காட்டினர்.
கனேடிய அரசியலமைப்பின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக அதிகாரங்களில் மத்திய நாடாளுமன்றம் சட்டங்களை இயற்றி அத்துமீறுவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் திட்டவட்டமாக அறிவித்தனர்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, கார்பன் வரி (Carbon Tax) மற்றும் ஆற்றல் வள மேம்பாடு (Energy Sector) போன்ற பல விடயங்களில் கியூபெக் மாகாணத்திற்கும் அல்பர்ட்டாவுக்கும் இடையே நீண்டகாலக் கொள்கை முரண்பாடுகள் நிலவி வருகின்றன.
இருப்பினும், தற்போதைய மத்திய அரசின் செயற்பாடுகளை எதிர்த்தாக வேண்டிய அரசியற் சூழலில் மாகாணங்களின் சுயாட்சி உரிமையைப் பாதுகாப்பது என்ற ஒற்றை இலக்கிற்காக, தங்களின் ஏனைய அரசியல் வேறுபாடுகளைப் புறந்தள்ளிவிட்டு இவ்விரு மாகாணத் தலைவர்களும் கைகோர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
