கனடா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட 60-க்கும் மேற்பட்ட வர்த்தகக் கூட்டாளி நாடுகளின் மீது புதிய இறக்குமதி வரிகளை விதிப்பதற்கு, அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. சர்வதேச விநியோகச் சங்கிலியில் (Supply Chains) கட்டாய உழைப்பு
(Forced Labour) மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்கத் தவறியதாகக் கூறியே, இந்த இறக்குமதி வரிகள் புதிதாக விதிக்கப்படவுள்ளன. அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி (USTR) ஜேமிசன் கிரீர் (Jamieson Greer) இவ்விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாதம் அதிபர் டிரம்பின் பொதுவான உலகளாவிய இறக்குமதி வரிகளை அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது. அதனைத் தொடர்ந்து, அதற்கு மாற்றாக இந்த புதிய வரி விதிப்பு உத்தியை வெள்ளை மாளிகை கையில் எடுத்துள்ளது. அமெரிக்காவின் மிக முக்கிய வர்த்தகப் பங்காளியான கனடாவின் வர்த்தக அமைச்சர் டொமினிக் லெப்லாங்க் (Dominic LeBlanc) வொஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்து, உரையாடிய சில மணித்தியாலங்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ”கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுப்பதற்கு, தமது மிக முக்கியமான வர்த்தகப் பங்காளர்கள், தவறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என, அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஜேமிசன் கிரீர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது. எனினும், கனடா-அமெரிக்கா-மெக்சிகோ வர்த்தக ஒப்பந்தத்தின் விதிகளுக்கு உட்பட்ட உற்பத்திப் பொருட்களுக்கு இதிலிருந்து விதிவிலக்குஅளிக்கப்படும் என்பதால், கனடாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 90 சதவீதப் பொருட்களுக்கு இதனால் பாதிப்பு இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
