கியூபெக் மாகாண அரசும் மத்திய அரசும் இணைந்து சுமார் 1,000 கோடி டொலர் பெறுமதியான ஐந்து முக்கிய உள்கட்டமைப்பு உடன்படிக்கைகளில் உத்தியோகபூர்வமாகக் கையெழுத்திட்டுள்ளன. கியூபெக் மாகாணத்தின் பொதுப் போக்குவரத்து, சுகாதாரம், வீடமைப்பு மற்றும் உயர்கல்வித் துறைகளை, அடுத்த பத்தாண்டுகளில் முற்றாக நவீனமயமாக்கும் நோக்கிலேயே இந்த உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நெடுநாட்களாக இழுபறியில் இருந்த இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிதியுதவி ஒப்பந்தத்தை, பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) மற்றும் கியூபெக் மாகாண முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் (Christine Fréchette) ஆகிய இருவரும் இணைந்து, லோங்காய் நகரில் நடைபெற்ற கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிட்டனர். இந்த 1,000 கோடி டொலர் நிதியானது, கியூபெக் மாகாணத்தின் பல்வேறு தேவைகளுக்காகப் பிரிக்கப்பட்டு முதலீடு செய்யப்படவுள்ளது.
ஒட்டுமொத்த நிதியில் 600 கோடி டொலருக்கும் அதிகமான நிதி, கியூபெக் மாகாணத்தின் பொதுப் போக்குவரத்து அமைப்புகளை நவீனப்படுத்த ஒதுக்கப்பட்டுள்ளது. கனடா பொதுப் போக்குவரத்து நிதியின் (CPTF) கீழ், 440 கோடி டொலர்
நிதி, மொன்றியல் மெட்ரோவின் புளூ லைன் (Blue line) விரிவாக்கம் மற்றும் கியூபெக் சிட்டி அதிவேகப் போக்குவரத்து (Tramway) போன்ற முக்கிய உள்கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படவுள்ளது.
தற்போதுள்ள போக்குவரத்து வலையமைப்புகளைப் பராமரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அடுத்த 10 ஆண்டுகளில், 132.9 கோடி டொலர் அடிப்படை நிதி வழங்கப்படவுள்ளது.
100 கோடி டொலர் நிதி கியூபெக் மாகாண சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் 17 மாகாண மருத்துவமனைகளை விரிவுபடுத்தவும் நவீனப்படுத்தவும் பயன்படுத்தப்படவுள்ளது. 270 கோடி டொலர் நிதி, கியூபெக் மாநிலத்தின் வீடமைப்பு, பல்கலைக்கழக உள்கட்டமைப்பு மற்றும் குடிநீர் விநியோகத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. கியூபெக்கின் முன்னாள் முதல்வர் பிரான்சுவா லெகோட்டின் (François Legault) மாகாண அரசு நிர்வாகம் ஆனது, மொன்றியல் மற்றும் கியூபெக் சிட்டியின் போக்குவரத்துத் திட்டங்களுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியளிக்க வேண்டும் எனத் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்திருந்தது.
இந்த நிலையிலேயே, கியூபெக்கின் தற்போதைய புதிய முதல்வர் கிறிஸ்டின் பிரெஷெட் காலத்தில் இந்த வெற்றிகரமான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
