மொன்றியலில், கடந்த 2023-ஆம் ஆண்டு, இரு பிள்ளைகளின் தந்தையான ஆண்ட்ரி பெடுஹோவ் (Andrei Petuhov) கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டாவது நபரும், தற்போது நீதிமன்றத்தால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மொன்றியலின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றான ஆரஞ்சு ஜூலப் (Orange Julep) உணவகத்தின் வாகன நிறுத்துமிடத்தில், இந்தக் கொலைச்சம்பவம் இடம்பெற்றது.
இச்சம்பவம் 2023-ஆம் ஆண்டில் மொன்றியலில் நிகழ்ந்த 10-ஆவது கொடூரக் கொலைச் சம்பவமாகப் பதிவாகியிருந்தது. அந்த குடும்பத்தலைவர் படுகொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவத்தின், பிரதான குற்றவாளியும் பயிற்சி பெற்ற குத்துச்சண்டை வீரருமான இஸ்மாயில் கரோய், இந்தத் தாக்குதலை நடத்திய பின்னர் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிப்பதற்காக ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார். மொன்றியல் மாநகரக் காவல் துறையின் (SPVM) பெரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இவருக்கு எதிராக, சர்வதேச அளவிலான பிடியாணையைப் பெற்றனர்.
தீவிரத் தேடுதலின் பலனாக, கடந்த ஆண்டு பிரெஞ்சு அதிகாரிகளால் பிரான்சில் வைத்து இஸ்மாயில் கரோய் கைது செய்யப்பட்டார். நீண்ட இராஜதந்திர மற்றும் சட்ட நடைமுறைகளுக்குப் பின்னர், அவர் பிரான்சில் இருந்து அதிகாரப்பூர்வமாகக் கனடாவுக்கு நாடுகடத்தப்பட்டு, கனடாவுக்குள் கொண்டுவரப்பட்டார்.
பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், இஸ்மாயில் கரோய் தற்போது குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். அத்துமீறிய மனிதப்படுகொலை (Involuntary Homicide) மற்றும் தாக்குதல் முதலான குற்றச்சாட்டுகள், நீதிமன்றத்தில் அவர் மீது நிரூபிக்கப்பட்டுள்ளன. இஸ்மாயில் கரோய் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர் கிடைத்துள்ள மிக முக்கியமான நீதியாகக் கருதப்படுகிறது.
