ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு இடையூறு விளைவிக்க முயன்றதாகக் கூறி, ஓஷன் கோய் (Ocean Koi) என்ற எண்ணெய்க் கப்பலை ஈரானிய கடற்படையினர் ஓமன் வளைகுடாவில் வைத்து இன்று பறிமுதல் செய்துள்ளனர்.
இன்று அதிகாலை நடைபெற்ற ஒரு சிறப்பு நடவடிக்கையில் ஈரானின் புரட்சிகர காவல் படையின் (IRGC) கமாண்டோக்கள் பார்படாஸ் நாட்டுக்கொடியுடன் வந்த ஓஷன் கோய் கப்பலுக்குள் அதிரடியாக நுழைந்து அதனைக் கைப்பற்றினர்.
ஈரானின் தேசிய நலன்களுக்கும், அதன் எண்ணெய் ஏற்றுமதிக்கும் இந்தக் கப்பல் அச்சுறுத்தலாக இருந்ததாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானின் இந்தப் பறிமுதல் நடவடிக்கை, வளைகுடா பிராந்தியத்தில் ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. நள்ளிரவில் ஈரானிய கமாண்டோக்கள் ஆயுதங்களுடன் கப்பலுக்குள் ஏறி, அங்கு ஈரானியக் கொடியை ஏற்றும் வீடியோ காட்சிகளை அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
இந்தக் கப்பல் ஈரானிய எண்ணெயைச் சுமந்து சென்ற போதிலும், பிராந்திய சூழலைப் பயன்படுத்தி ஈரானின் வர்த்தகத்தைச் சீர்குலைக்க முயன்றதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
தற்போது இந்தக் கப்பல் ஈரானின் தெற்கு கடற்கரைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்தக் கப்பல் ஷாங்காயைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
முன்னதாக, ஈரானின் நிழல் கப்பல் (Shadow Fleet) எனக்கூறி, அமெரிக்காவால் இந்தக் கப்பல் மீது தடைகள் விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில வாரங்களாக ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை கூட இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
