கியூபெக் மாகாணத்தின் சோமேடி (Chomedey) தொகுதி உறுப்பினர் சோனா லக்ஹோயன் ஆலிவர் (Sona Lakhoyan Olivier), அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு லிபரல் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார்.
சோனா லக்ஹோயன் ஆலிவர் மீதான ஒழுக்கக் கேடு புகார்களை விசாரித்த கியூபெக் ஒழுக்கநெறி ஆணையம் (Ethics Commission), தனது இறுதி அறிக்கையை வெளியிட்டது.
சோனா, தனது தொகுதி அலுவலகத்திற்கு அரசு வழங்கிய நிதியையும் வளங்களையும், கட்சியின் தலைமைப் பதவித் தேர்தலுக்காகத் தவறாகப் பயன்படுத்தியமை, அந்த அறிக்கை ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கான அலுவலக வளங்களை அரசியல் கட்சி வேலைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற விதியை மீறி, சோனா தனது அலுவலகப் பணியாளர்களைக் கட்சித் தேர்தலுக்காகப் பயன்படுத்தியுள்ளார்.
ஒழுக்கநெறி ஆணையத்தின் விசாரணையின் போது, முறையான ஒத்துழைப்பு வழங்காமல் முரண்பாடான தகவல்களை வழங்கி விசாரணையைத் தடுக்க முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையை அவர் திசைதிருப்ப முயன்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவருக்கு 8,000 டொலர் அபராதம் விதிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதோடு, லிபரல் கட்சி அவரைத் தனது குழுவிலிருந்து நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டுள்ளது.
நேர்மை என்பதில் எவ்வித சமரசமும் இல்லை" என்று கூறியுள்ள லிபரல் கட்சித் தலைமை, மக்கள் பணத்தைத் தவறாகப் பயன்படுத்திய ஒருவருக்குக் கட்சியில் இடமில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
