பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், மொன்றியலைச் சேர்ந்த முன்னாள் கூடைப்பந்து பயிற்சியாளர் ரொபர்ட் லூ (Robert Luu)- விற்கு ஒன்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
செயிண்ட்-லாரன்ட் (Saint-Laurent) உயர்நிலைப் பள்ளியில் பயிற்சியாளராகப் பணியாற்றிய ரொபர்ட் லூ, 12 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த வழக்கு விசாரணை மொன்றியல் நீதிமன்றத்தில் நேற்று முடிவுக்கு வந்தது.
நீதிபதி பாட்ரிசியா காம்பாக்னோன் (Justice Patricia Compagnone), குற்றவாளிக்கு 9 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். (பாதிக்கப்பட்ட இளம்பெண்) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், தனது பதின்ம வயதின் தொடக்கத்தில் நடந்த இந்த கொடூரச் செயல் தனது அடையாளத்தையும், மற்றவர்களுடனான உறவுகளையும் சிதைத்துவிட்டதாக உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
ரொபர்ட் லூ, அந்தச் சிறுமிக்கு பயிற்சியாளராக இருந்தபோது, அவருக்கு மருத்துவ உதவி செய்வது போலவும், நலம் விரும்பி போலவும் நடித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஆனால், அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி 12 வயது முதல் 15 வயது வரை அச்சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்களை அளித்துள்ளார்.
இதேவேளை, இதே பள்ளியைச் சேர்ந்த மற்றுமொரு பயிற்சியாளரான சார்லஸ் சேவியர் போய்சிலார்ட் (Charles Xavier Boislard) என்பவருக்கு ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியின் விளையாட்டுத் துறை சரியாகக் கண்காணிக்கப்படாததே இத்தகைய குற்றங்களுக்குக் காரணம் என கல்வி அமைச்சின் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஷபேகா டெய்லர் (Shabeka Taylor), பள்ளி நிர்வாகத்திடம் 3.2 மில்லியன் டொலர் நட்டஈடு கோரி சிவில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
விளையாட்டுத் துறையில் பயிற்சியாளர்களாக இருப்பவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் கடுமையான தண்டனை கிடைக்கும் என்ற எச்சரிக்கையை இந்தத் தீர்ப்பு விடுத்துள்ளது.
