இலங்கையின் என்.டி.பி (NDB) வங்கியில் இடம்பெற்ற சுமார் 1,320 கோடி இலங்கை ரூபாய் நிதி மோசடி தொடர்பாக, ஒரு விசேட தடயவியல் கணக்காய்வை (Forensic Audit) நடத்த அந்த வங்கி தீர்மானித்துள்ளது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ‘டெலாய்ட்’ (Deloitte) நிறுவனம் ஊடாக இந்த விசேட தடயவியல் கணக்காய்வை (Forensic Audit) நடத்த என்.டி.பி (NDB) வங்கி தீர்மானித்துள்ளது.
வங்கியின் உள்ளகச் செயல்பாடுகளில் இடம்பெற்ற இந்த பாரிய முறைகேடு குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவுறுத்தியிருந்தது.
இதனடிப்படையில், ‘டெலாய்ட் இந்தியா’ நிறுவனத்தின் நிபுணர்கள் இந்தக் கணக்காய்வை மேற்கொள்வார்கள் என கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாக சுமார் 2,600 கொடுக்கல் வாங்கல்கள் மூலம் இந்தத் தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. என்.டி.பி (NDB) வங்கியின் சில ஊழியர்கள் வெளிநபர்களுடன் இணைந்து இச்சதித்திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
முன்னெடுக்கப்படவுள்ள இந்த தடயவியல் கணக்காய்வு விசாரணையின் மூலம் வங்கியின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் இருந்த ஓட்டைகள், நிர்வாகக் குறைபாடுகள் மற்றும் கண்காணிப்புத் தவறுகள் ஆகியவை விரிவாக ஆராயப்படவுள்ளன.
இந்தக் கணக்காய்வின் முடிவுகள் மற்றும் இடைக்கால அறிக்கைகள் நேரடியாக இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைப் பணிப்பாளரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.இதேவேளை, இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஏற்கனவே இந்த விவகாரத்தில் பலரைக் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
