இலங்கைக் கடற்படையிலிருந்து ஓய்வுபெறும் வீரர்களுக்கு சர்வதேச கப்பல் போக்குவரத்து மற்றும் கடல்சார் துறைகளில் (Shipping and Marine Sector) வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்தியுள்ளது.
இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் இலங்கையின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் ஜனித்த ருவன் கொடித்துவக்கு ஆகியோர் இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினர்.
கடற்படையில் பணியாற்றும் வீரர்கள் பல வருட அனுபவமும், சிறந்த தொழில்நுட்பத் திறனும் கொண்டிருந்த போதிலும், சர்வதேச வணிகக் கப்பல்களில் பணியாற்றுவதற்குத் தேவையான சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ்கள் (Professional Qualifications) அவர்களிடம் இல்லாதது ஒரு பெரும் குறையாகக் காணப்பட்டது.
இதனை நிவர்த்தி செய்யும் வகையில், அவர்கள் ஓய்வுபெறுவதற்கு முன்னதாகவே உலகளாவிய தரத்திலான தகுதிக் காலச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் இலங்கையின் கடற்படையிலிருந்து ஓய்வுபெறும் நூற்றுக்கணக்கான வீரர்களின் அனுபவத்தை வீணாக்காமல், அவர்களைச் சர்வதேச வேலைச் சந்தைக்கு அனுப்புவதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணி வருமானத்தை அதிகரிக்க முடியும் என, அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.
இதற்காக இலங்கை கடற்படை, பாதுகாப்பு அமைச்சு மற்றும் வணிகக் கப்பல் செயலகம் (Merchant Shipping Secretariat) ஆகியவற்றுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் இலங்கையின் கடற்படைத் தளபதி மற்றும் வணிகக் கப்பல் போக்குவரத்து பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
