உலகின் மிக முக்கியமான கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) பாதுகாப்பதற்கான சர்வதேசக் கூட்டுப் படையில் கனடா அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளது.
ஈரானின் அச்சுறுத்தல்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படுவதைத் தடுக்க, அமெரிக்கா தலைமையிலான இந்த நடவடிக்கையில் பங்கேற்பதாகக் கனடா அறிவித்துள்ளது. ஈரானுக்கும் ஓமானுக்கும் இடைப்பட்ட மிகக்குறுகிய கடல் பகுதியான ஹோர்முஸ் நீரிணை வழியாகவே உலகின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் கொண்டு செல்லப்படுகிறது.
சமீபகாலமாக ஈரானிய புரட்சிகர காவற்படை (IRGC) இப்பகுதியில் தனது நடமாட்டத்தை அதிகரித்துள்ளதோடு, கப்பல் போக்குவரத்தைத் தடுக்கப் போவதாகவும் அச்சுறுத்தி வருகிறது. இது உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையை உயரச் செய்துள்ளது.
இந்தநிலையினை மாற்றும் நோக்கில், இந்தச் சர்வதேசப் பணியில் மத்திய அரசு தனது கடற்படை மற்றும் உளவுத்துறை வளங்களை ஈடுபடுத்தவுள்ளது. மத்திய அரசின் ஹாலிஃபாக்ஸ் (Halifax-class) ரகப் போர்க்கப்பல் ஒன்று இப்பகுதிக்குப் பாதுகாப்புப் பணிக்காக அனுப்பப்படுகிறது.
மேலும் நாட்டின் சிபி-140 அரோரா (CP-140 Aurora) ரக நீண்ட தூர ரோந்து விமானங்கள் வான்வழி கண்காணிப்பில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஆக்கிரமிப்பு நடவடிக்கை அல்ல; மாறாக உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான ஒரு தற்காப்பு முயற்சியே என்று வெளியுறவுத்துறை அமைச்சர் மெலனி ஜோலி தெரிவித்துள்ளார்.
கனடா கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் நாடாக இருந்தாலும், சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் கனடிய மக்களின் அன்றாட
எரிபொருள் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அடுத்த 10 நாட்களுக்குள் கனேடிய போர்க்கப்பல் மத்திய கிழக்கு பகுதியைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

