கியூபெக் மாகாணத்தின் சர்ச்சைக்குரிய மதச்சார்பின்மை சட்டமான குறித்த வரலாற்றுச் சிறப்புமிக்க விசாரணை நேற்று உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விசாரணை, கனடாவின் அரசியலமைப்புச் சட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.
2019-ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட இந்தச் சட்டத்தின்படி, அரசுப் பணியில் இருக்கும் ஆசிரியர்கள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் பணியின்போது ஹிஜாப், தலைப்பாகை (Turban) அல்லதுசிலுவை போன்ற மத அடையாளங்களை அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கொள்கையானது மாகாணத்தின் நடுநிலைமையைப் பேணுவதற்கு அவசியம் என, கியூபெக் அரசு வாதிடுகிறது. இந்தச் சட்டத்திற்கு எதிராக மொன்றியல் ஆங்கிலப் பாடசாலைச் சபை (EMSB), கனடா உலக சீக்கிய அமைப்பு மற்றும் முஸ்லிம் பெண்கள் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சட்டம் மதச் சிறுபான்மையினரையும், குறிப்பாகப் பெண்களையும் குறிவைத்து ஓரங்கட்டுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒரு குடிமகன் தனது மதம் அல்லது வேலை – இதில் ஏதோ ஒன்றை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் என்ற நிலை உருவாவது மனித உரிமை மீறல் என்பது இவர்களது முக்கிய வாதமாக அமைந்துள்ளது.
கனடிய அரசியலமைப்பில் உள்ள நாட்வித்ஸ்டாண்டிங் கிளாஸ் (Notwithstanding Clause) என்ற சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஒருவரின் அடிப்படை உரிமைகளை மாகாண அரசுகள் தன்னிச்சையாக ரத்து செய்ய முடியுமா? என்ற கேள்வியே இந்த வழக்கின் மையப்புள்ளியாக அமைந்துள்ளது.
கியூபெக் மாகாண அரசு இந்த அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் எனப் பிரதிவாதிகள் கோருகின்றனர். இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, மத்திய அரசு மற்றும் ஒன்ராறியோ, அல்பர்ட்டா உள்ளிட்ட பல மாகாண அரசுகள் இதில் தலையிட்டுள்ளன.
இந்த வழக்கில், மொத்தமாக 61 தரப்பினர் தங்கள் கருத்துகளை முன்வைக்க உள்ளனர். இந்த வழக்கில் அளிக்கப்படவுள்ள தீர்ப்பு, கியூபெக் மாகாணத்திற்கு மட்டுமல்லாது, ஒட்டுமொத்த கனடியர்களின் அடிப்படை உரிமைகளின் இருப்பைத் தீர்மானிக்கவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
