ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானமையால் தற்காலிகமாக மூடப்பட்ட நியூயார்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையம் தற்போது மீளவும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம், ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
மொன்றியலில் இருந்து 72 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் வந்த ஜாஸ் ஏவியேஷன் (Jazz Aviation) நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் கனடா எக்ஸ்பிரஸ் என்ற விமானமே இந்த விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விமானம், நேற்று நள்ளிரவு 11:40 மணியளவில், நியூயார்க்கின் லாகார்டியா (LaGuardia) விமான நிலையத்தின் நான்காவது ஓடுதளத்தில் தரையிறங்கியது.
அப்போது, வேறொரு அவசர அழைப்பிற்காக ஓடுதளத்தைக் கடக்க முயன்ற இமான நிலைய தீயணைப்பு வாகனம் மீது, இந்த விமானம் பலமாக மோதியது. இந்த விபத்தில் விமானத்தின் பிரதான விமானி மற்றும் துணை விமானி ஆகிய இரு கனடியர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
விமானத்தில் இருந்த 39 பயணிகள் மற்றும் தீயணைப்பு வாகனத்தில் இருந்த இரு அதிகாரிகள் உட்பட மொத்தம் 41 பேர் காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இவர்களில் 9 பேர் இன்னும் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து லாகார்டியா விமான நிலையம் முழுமையாக மூடப்பட்டு, 585-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. அமெரிக்காவின் தேசிய விசாரணை அமைப்பு இந்த விபத்து குறித்து உயர்மட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது. விமான நிலைய ஊழியர் பற்றாக்குறை அல்லது சோர்வு காரணமாக இந்தத் தவறு நடந்ததா என்ற கோணத்தில் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. குறித்த விமான நிலையம் தற்போது திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
