லெபனான் எல்லைப் பகுதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படைத் தளம் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அங்கு பணியாற்றும் கனடியப் படையினர் எவருக்கும் பாதிப்பில்லை என, பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
தெற்கு லெபனானில் உள்ள ‘நக்கூரா’ (Naqoura) பகுதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் (UNIFIL) தலைமையகத்திற்கு அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏவுகணையொன்று இடைமறித்துத் தாக்கப்பட்டது.
ஏவுகணை சிதறல்கள் விழுந்ததில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையின் வளாகத்தில் உள்ள சில கட்டிடங்கள் சேதமடைந்தன.
இதன்போது பாரிய வெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் அப்பகுதியில் கேட்டதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், கனடாவின் ‘ஒபரேஷன் ஜேட்’ (Operation JADE) திட்டத்தின் கீழ் அங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கனடிய இராணுவத்தினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் எவ்விதக் காயமுமின்றி தப்பியிருப்பதாகவும் மத்திய அரசு தற்போது அறிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சர் டேவிட் மெக்கின்டியின் அலுவலகம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளது.
