வாடகை வீடுகளில் வளர்ப்புப் பிராணிகளை (Pets) வளர்ப்பதற்குத் தடை விதிக்கும் ஒப்பந்த விதிகள், மனித உரிமைகளுக்கு எதிரானது என கியூபெக் வீடமைப்புத் தீர்ப்பாயம் (TAL) தீர்ப்பொன்றை வழங்கியுள்ளது.
மாகாணத்தின் மனித உரிமைகள் சாசனத்தின்படி, ஒருவரது தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என இந்தத் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வசித்து வரும் ‘டெஜார்டின்ஸ்’ (M. Desjardins) என்ற வாடகைதாரர், தனது வீட்டில் நாய் வளர்ப்பதாகக் கூறி, அவரை வெளியேற்றுவதற்கு வீட்டின் உரிமையாளர் முயற்சித்தார்.
ஒப்பந்தத்தில் “வளர்ப்புப் பிராணிகளுக்கு அனுமதி இல்லை” என்ற விதி இருந்ததை வீட்டின் உரிமையாளர் இதற்குக் காரணமாகக் காட்டினார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுசான் குவெவ்ரெமண்ட் (Suzanne Guévremont), நில உரிமையாளரின் கோரிக்கையை நிராகரித்தார்.
ஒரு நபர் தனது வீட்டிற்குள் யாருடன் அல்லது எதனுடன் வசிக்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட உரிமை எனவும் இதில் தலையிடுவது ஒருவரது கண்ணியம் மற்றும் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலாகும் எனவும் நீதிமன்றத்தின் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
