நாட்டின் வரலாற்றிலேயே முதல்முறையாக, தந்தை மற்றும் மகன் என இரு நபர்கள், தங்களது விந்தைத் தானம் செய்வதற்கு, கியூபெக் உயர் நீதிமன்றம் அதிரடித் தடை விதித்துள்ளது. நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்குத் தந்தையான இவர்கள், மருத்துவ விதிகளையும் ஒப்பந்தங்களையும் மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
பிலிப் நார்மண்ட் (Philippe Normand) மற்றும் அவரது மகன் டொமினிக் சீலோஸ் (Dominik Seelos) ஆகியோருக்கு எதிராக, கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி சைமன் சேம்பர்லேண்ட் இந்தத் தடையை விதித்துள்ளார். இவர்கள் மூலம் பிறந்துள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் அளவை விடப் பலமடங்கு அதிகமாக உள்ளது.
லோரி (Laurie) என்ற பெயருடைய ஒரு தாய் தொடர்ந்த வழக்கின் மூலம் இந்தத் தகவல்கள் வெளியாகின. ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குழந்தைகளைத் தோற்றுவிக்கக்கூடிய
அளவை விட அதிகமாக விந்தைத் தானம் செய்ய மாட்டோம் என அவர்கள் அளித்த வாக்குறுதி தற்போது மீறப்பட்டுள்ளதாக லோரி குற்றம் சாட்டியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்ட தந்தை – பிலிப் நார்மண்ட் (Philippe Normand) சுமார் 450 குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதும், மகன் டொமினிக் சீலோஸ் (Dominik Seelos) 160-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தந்தையாக இருப்பதும் தெரியவந்தது.
அதாவது, ஒரு சிறிய நகரத்தின் மக்கள்தொகைக்கு இணையான குழந்தைகளுக்கு இவர்களே தந்தையாக உள்ளனரெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் அந்தக் குழந்தைகளுக்கு இடையே இரத்த உறவு முறையிலான திருமணங்கள் நடக்கும் அபாயத்தை ஏற்படுத்துவதாக கியூபெக் உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது கியூபெக் மாகாணத்தில் விந்து தானத்திற்கு என, முறையான சட்டப்பூர்வக் கட்டுப்பாடுகள் இல்லை என்பதால், இதைப் பயன்படுத்தி இவர்கள் பேஸ்புக் (Facebook) போன்ற சமூக வலைதளங்கள் மூலம் தங்களை தானம் செய்பவர்களாக முன்னிலைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தத் தீர்ப்பு தற்காலிகமானது என்றாலும், வழக்கு முடியும் வரை இவர்கள் கியூபெக்கில் விந்து தானம் செய்ய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
