புதிய கூட்டு ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறி காரணமாக, ஏர் ட்ரான்சாட் (Air Transat) விமானிகள் சங்கம் வேலைநிறுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளதால், இந்த விடுமுறைக் காலத்தில் ஆயிரக்கணக்கான கனடியர்களின் பயணத் திட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏர் ட்ரான்சாட் விமான நிறுவனத்தின் விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏர் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA) அமைப்பைச் சேர்ந்த 203 உறுப்பினர்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடத் தயாராகியுள்ளனர்.
நிறுவனத்தின் நிர்வாகத்தினருடனான பேச்சுவார்த்தையில் ஒருமித்த தீர்வு எட்டப்படாவிட்டால், எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு சட்டப்பூர்வ தகுதியை, அவர்கள் பெற்றுள்ளனர்.
இந்த வேலைநிறுத்தமானது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டுப் பயணக் காலத்துக்குச் சற்று முன்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், பயணிகளுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகின்றது.
வேலைநிறுத்தம் செய்ய அனுமதி கோரி, அந்த விமான நிறுவனத்தின் விமானிகள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 99.87% விமானிகள் தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
