ரிச்மண்ட் ஹில் நகரில் நடந்த ‘திடீர் தாக்குதலில்’ படுகாயமடைந்த 51 வயது மதிக்கத்தக்க நபர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய காவல்துறையினர் (York Regional Police) கொலை வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்திலேயே ஒருவரை கைது செய்துள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்தவரும், சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று மாலை 5 மணிக்குப் பிறகு, யங் தெரு (Yonge Street) மற்றும் எல்ஜின் மில்ஸ் சாலை கிழக்கு (Elgin Mills Road E) அருகில் உள்ள லொரைன் வீதி (Lorraine Street) பகுதியில் தாக்குதல் ஒன்று நிகழ்ந்ததாக காவல்துறைக்கு அழைப்பு வந்தது.
சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், 51 வயது மதிக்கத்தக்க ஒரு நபரை தீவிர காயங்களுடன் மீட்டனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
உயிரிழந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்குத் தகவல் தெரிவிக்கும் வரை, அவரது பெயரையோ அல்லது வசிப்பிடத்தையோ காவல்துறை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
