கியூபெக் மாகாணத்தில் உள்ள நீர்நிலைகள் தொடர்பான ஒரு புதிய ஆய்வு, தெற்குக் கியூபெக்கில் உள்ள ஆறுகள் மற்றும் ஏரிகளில் 98% பொதுமக்களுக்கு அணுக முடியாதவை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
எண்ணற்ற ஆறுகள் மற்றும் ஏரிகள் கொண்ட கியூபெக் போன்ற ஒரு மாகாணத்தில், இவ்வளவு நீர்நிலைகள் பொதுமக்கள் அணுக முடியாத நிலையில் உள்ளமை அவதானிப்புக்குரியதாக மாறியுள்ளது.
இதை அடுத்து, ‘ரிவியர் அமைப்பு’ (Fondation Rivières) எனப்படும் ஒரு சுற்றுச்சூழல் அமைப்பு, அரசு உடனடியாகச் செயல்பட்டு, எஞ்சியுள்ள பொது அணுகல் புள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும் என்றும், புதிய அணுகல் புள்ளிகளை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
மொன்ட்ரியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களான செபாஸ்டியன் ரியோக்ஸ் மற்றும் ரோடால்ஃப் கோன்சலஸ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட இந்த ஆய்வு, கியூபெக்கின் நீர்நிலைகள் தனியார்மயமாக்கப்பட்டுள்ளதன் தீவிர தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது.
தெற்குக் கியூபெக்கில் உள்ள பத்தில் மூன்று நீர்நிலைகளின் கரைகள் முழுமையாக தனியார் வசம் உள்ளன.
அதாவது, பொதுமக்களுக்கு அங்கு நீர்நிலைகளை அணுக எந்த வழியும் இல்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும், பத்தில் மூன்று ஏரிகளின் கரைகள் குறைந்தபட்சம் 90% தனியார் மயமாக்கப்பட்டுள்ளன.
கியூபெக் மாகாணத்தின் 104 நகராட்சிகளில் உள்ள 624 நீர்நிலைகள் மற்றும் 56,729 கடற்கரைப் பகுதிகளை ஆய்வு செய்ததன் மூலம் இந்த அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
