சுவீடனின் ‘சாப்’ (Saab) நிறுவனத்திடமிருந்து ‘குளோபல்ஐ’ (GlobalEye) ரகத்தைச் சேர்ந்த ஆறு கண்காணிப்பு விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடிய அரச படைகளின் (RCAF) இராணுவத் தேவைகளை இவ்விமானங்கள் முழுமையாகப் பூர்த்தி செய்யுமா என்பது குறித்து எவ்வித உத்தரவாதமும் இல்லாத நிலையிலேயே, இவற்றைக் கொள்முதல் செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றது.
போட்டி நிறுவனங்களுக்கு இராணுவத்தின் துல்லியமான தேவைகளைத் தெரிவிக்காமலேயே கனடிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், சமீபத்திய மதிப்பீடுகளில் இவ்விமானங்கள் இராணுவத்தின் தேவைகளில் ஒரு பகுதியை மட்டுமே பூர்த்தி செய்வதாகக் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த வசந்த காலத்தில் இந்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்ட போதிலும், இந்த விமானங்கள் எத்தகைய அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறித்து கனடிய இராணுவ அதிகாரிகளும் சாப் நிறுவனமும் கடந்த ஜூன் மாத இறுதியில் முதன்முதலில் சந்தித்துப் பேசியுள்ளனர்.
தொடர்ந்து ஓகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்ட மறுஆய்வுக் கூட்டத்தில், ‘குளோபல்ஐ’ கண்காணிப்பு விமானத்தின் குறைபாடுகள் மற்றும் போதாமைகள் உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளன.
தற்போதைய வடிவமைப்பு மற்றும் அமைப்பின்படி, ‘குளோபல்ஐ’ விமானத்தில் 360 பாகை (degrees) முழுமையான ரேடார் கண்காணிப்பு வசதி இல்லை என்பது கனடிய இராணுவத்திற்குப் பெரும் விசனத்தை அளித்துள்ளது.
அத்துடன், அந்த ரக விமானத்தின் ரேடாரின் வீச்சு (range) மற்றும் அலைவரிசை (frequency) தொடர்பிலும் கேள்விகள் எழுந்துள்ளன.
எனினும், இக்குறைகளை நிவர்த்தி செய்ய விமானத்தின் முன் மற்றும் பின் பகுதிகளில் கூடுதல் ரேடார்களைப் பொருத்துவதற்கு சாப் நிறுவனம் முன்வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

