கியூபெக் (Quebec) மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற தனியார் உயர்கல்வி நிறுவனமான ‘லாசால் கல்லூரி’ (LaSalle College), புதிய கல்வியாண்டு வகுப்புகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
ஆங்கில மொழிக் கல்வித் திட்டங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக மாணவர்களைச் சேர்த்தமைக்காக கியூபெக் மாகாண அரசினால் ‘லாசால் கல்லூரி’க்கு, பெருந்தொகையான அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.
லாசால் கல்லூரி 2023-2024 கல்வியாண்டில் 716 மாணவர்களையும், 2024-2025 கல்வியாண்டில் 1,066 மாணவர்களையும் அனுமதித்த அளவை விட அதிகமாகச் சேர்த்ததாக, மாகாண உயர்கல்வி அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்தே, அந்தக் கல்லூரி புதிய கல்வியாண்டு வகுப்புகளை இடைநிறுத்தியுள்ளது. ‘லாசால் கல்லூரியின் இந்த நடவடிக்கை சுமார் 3,000 மாணவர்களின் கல்வியைப் பாதித்துள்ளது.
இந்நடவடிக்கையைத் தொடர்ந்து, கல்லூரியின் நிதி நெருக்கடியைக் கையாள்வதற்கு நீதிமன்றத்தில் கடனாளர்கள் பாதுகாப்பையும் (Creditor Protection) லாசால் கல்லூரி நிர்வாகம் பெற்றுள்ளது.
மேலும், நிறுத்தப்பட்டுள்ள அரச மானியங்களை உடனடியாக மீள வழங்க வேண்டும் எனவும், அபராதத் தொகையைச் செலுத்துவதற்கு நியாயமான தவணை முறைத் திட்டத்தை அரசு வழங்க வேண்டும் எனவும் லாசால் கல்லூரி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

